7 Dec 2020

சுந்தரமூர்த்தி நாயனார் பதிகம் (பத்துஊர் புக்கு)



சுந்தரர் திருப்பதிக வரலாறு:

         சுந்தரர், திருவாரூரிலிருந்து திருநாகைக் காரோணத் திறைவரைத் தொழுது பொற்பூணும், மணிப்பூணும், நவமணிகளும், ஆடை, சாந்தம், குதிரை, சுரிகை முதலியனவும் வேண்டிப் பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 பெரிய. புரா. கழறிற். புரா. 63)


பெரிய புராணப் பாடல் எண் : 84

சேவித்து அணையும் பரிசனங்கள்

         சூழத் திருவா ரூர்இறைஞ்சி,

காவில் பயிலும் புறம்பணையைக்

         கடந்து போந்து, கீழ்வேளூர்

மேவிப் பரமர் கழல்வணங்கிப்

         போந்து, வேலைக் கழிக்கானல்

பூவில் திகழும் பொழில்நாகை

         புகுந்து காரோ ணம்பணிந்தார்.


         பொழிப்புரை : தம்மை வழிபட்டு வரும் ஏவலர்கள் சூழ, அத்திருவாரூரை வணங்கிச் சோலைகள் மிக்க புறம்பணையைக் கடந்து போய்த், `திருக்கீழ்வேளூரைச்\' சேர்ந்து, அங்கு இறைவரின் திருவடிகளை வணங்கி, மேற்சென்று, கடல்கழிக் கானல் சூழ்ந்து மலர்கள் நிறைந்து விளங்கும் சோலைகளையுடைய நாகப்பட்டினத்திற்குச் சென்று திருக்காரோணத்தை வணங்கினர்.



பெ. பு. பாடல் எண் : 85

திருக்கா ரோணச் சிவக்கொழுந்தைச்

         சென்று பணிந்து, சிந்தையினை

உருக்குஆர் வச்செந் தமிழ்மாலை

         சாத்தி, சிலநாள் உறைந்துபோய்,

பெருக்கு ஆறுஉலவு சடைமுடியார்

         இடங்கள் பலவும் பணிந்துஏத்தி,

அருட்கா ரணர்தம் திருமறைக்காடு

         அணைந்தார் சேரர் ஆரூரர்.


         பொழிப்புரை : திருநாகைக்காரோணத்தில் வீற்றிருக்கும் சிவக்கொழுந்தாய இறைவரைப் பணிந்து, சிந்தையை உருக்குகின்ற ஆர்வத்தினால், பரந்த செந்தமிழ் மாலையான திருப்பதிககத்தை அருளிச் செய்து சாத்தி, சில நாள்கள் அங்குத் தங்கியிருந்து, மேற்சென்று, பெருகும் கங்கை பொருந்துவதற்கு இடமான சடையையுடைய பெருமானார் வீற்றிருக்கும் பதிகள் பலவற்றையும் வணங்கிப் போற்றிச் சென்று, அருளுடைய மூல முதல்வரான இறைவரின் திருமறைக்காட்டைச் சேரமானும் சுந்தரரும் அடைந்தனர்.


         குறிப்புரை : திருநாகைக் காரோணத்தில் அருளிய பதிகம் `பத்தூர்புக் கிரந்துண்டு' (தி.7 ப.46) எனத்தொடங்கும் கொல்லிக்கௌவாணப் பதிகமாகும். இடங்கள் பலவும் என்பன பொய்கைநல்லூர், திருவரிஞ்சையூர், திருக்கள்ளிக்குடி, திருக்கோளிலி, திருவாய்மூர், திருமுகத்தலை முதலாயினவாகலாம். பதிகங்கள் கிடைத்தில.


சுந்தரர் திருப்பதிகம்

ஓதுவார் மயிலை சர்குணதாத தேசிகர்

7. 046  திருநாகைக்காரோணம்    பண் - கொல்லிக்கௌவாணம்

                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1

பத்துஊர் புக்கு இரந்து உண்டு பலபதிகம் பாடிப்

பாவையரைக் கிறிபேசிப் படிறுஆடித் திரிவீர்,

செத்தார்தம் எலும்பு அணிந்து சேஏறித் திரிவீர்,

செல்வத்தை மறைத்துவைத்தீர், எனக்குஒருநாள் இரங்கீர்,

முத்தாரம் இலங்கிமிளிர் மணிவயிரக் கோவை

அவைபூணத் தந்து அருளி, மெய்க்கு இனிதா நாறும்

கத்தூரி கமழ்சாந்து பணித்து அருள வேண்டும்,

கடல்நாகைக் காரோணம் மேவி இருந் தீரே.


         பொழிப்புரை : கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , நீர் , பலவூர்களிற் சென்று , பல பாமாலைகளைப் பாடி இரந்து உண்பீர்; அங்ஙனம் இரக்குங்கால் , பிச்சைஇட வருகின்ற , பாவைபோலும் மகளிரோடு பொய்யான சொற்களைப் பேசிக் கரவு கொண்டு திரிவீர் ; இறந்தவரது எலும்புகளை மேலே பூண்டுகொண்டு , எருதின்மேல் ஏறித்திரிவீர் ; இவைகளைப் போலவே , உள்ள பொருளை மறைத்துவைத்து , என்பொருட்டு ஒரு நாளும் மனம் இரங்காது , ஏதும் இல்லை என்பீர் ; இவையெல்லாம் உமக்குச் சிறிதும் ஒவ்வா ; இப்பொழுது யான் அணிவதற்கு முத்தாரமும் , மேற்பட்டு விளங்குகின்ற மாணிக்கமாலை வயிரமாலைகளும் ஆகிய அவைகளைத் தந்து , உடம்பிற் பூசிக் கொள்வதற்கு , இனிதாக மணம் வீசுகின்ற கத்தூரியையும் , அத்தகையதான சந்தனமும் நீர் , தவிராது அளித்தருளல் வேண்டும் ,



பாடல் எண் : 2

வேம்பினொடு தீங்கரும்பு விரவிஎனைத் தீற்றி,

விருத்திநான் உமைவேண்ட, துருத்திபுக்குஅங்கு இருந்தீர்,

பாம்பினொடு படர்சடைகள் அவைகாட்டி வெருட்டிப்

பகட்ட,நான் ஒட்டுவனோ பலகாலும் உழன்றேன்,

சேம்பினொடு செங்கழுநீர் தண்கிடங்கில் திகழும்

திருவாரூர் புக்குஇருந்த தீவண்ணர், நீரே

காம்பினொடு நேத்திரங்கள் பணித்துஅருள வேண்டும்,

கடல்நாகைக் காரோணம் மேவி இருந் தீரே.


         பொழிப்புரை : கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , நீர் , என்னை , கைப்புடைய வேம்பினையும் , தித்திப்புடைய கரும்பினையும் கலந்து உண்பித்து , நான் , இங்கு உம்மிடம் எனக்குப் பிழைப்பை வேண்டிக் கொண்டிருக்க , நீர் என்முன் நில்லாது , திருத்துருத்தியில் புகுந்து , அங்கே இருந்துவிட்டீர் ; இப்பொழுது உம்மைக் கண்டேன் ; நீர் பாம்பும் , விரிந்த சடைகளுமாகிய இவைகளைக் காட்டி என்னை வெருட்டிப் பெருமை அடைந்து விட நினைத்தால் நான் அதற்கு ஒட்டுவேனோ ! ஒட்டேன் ; ஏனெனில் , உம்பின் நான் பலகாலும் திரிந்துவிட்டேன் ; நீர்ச்சேம்பும் , செங் கழுநீரும் , குளிர்ந்த அகழியில் விளங்குகின்ற திருவாரூரில் குடி புகுந் திருக்கும் தீவண்ணராகிய நீர் , இப்பொழுது எனக்கு ` காம்பு ` என்றும் , ` நேத்திரம் ` என்றும் பெயர் சொல்லப்படும் பட்டாடை வகைகளை அளித்தருளல் வேண்டும் .



பாடல் எண் : 3

பூண்பதுஓர் இளஆமை பொருவிடைஒன்று ஏறிப்

பொல்லாத வேடம்கொண்டு எல்லாருங் காணப்

பாண்பேசிப் படுதலையில் பலிகொள்கை தவிரீர்,

பாம்பினொடு படர்சடைமேல் மதிவைத்த பண்பீர்,

வீண்பேசி மடவார்கை வெள்வளைகள் கொண்டால்

வெற்புஅரையன் மடப்பாவை பொறுக்குமோ, சொல்லீர்,

காண்புஇனிய மணிமாடம் நிறைந்தநெடு வீதிக்

கடல்நாகைக் காரோணம் மேவி இருந் தீரே.


         பொழிப்புரை : விரிந்த சடையின்மேல் பாம்பையும் , சந்திரனையும் வைத்த பெருமையுடையவரே , காண்பதற்கு இனிய மணிமாடங்கள் நிறைந்த நீண்ட தெருக்களையுடைய , கடற்கரைக் கண் உள்ள திரு நாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , நீர் , அணிந்த ஓர் இளைய ஆமையின் ஓட்டோடு போர் செய்யும் எருது ஒன்றை ஏறி , விரும்புதல் இல்லாத வேடத்தைப் பூண்டு எல்லாருங் காண, இசைபாடி , இறந்தோரது தலையில் பிச்சை ஏற்றலை ஒழிய மாட்டீர் ; அங்ஙனம் பிச்சை ஏற்குங்கால் பிச்சையைக் கொண்டொழி யாது, வீண் சொற்களைப் பேசி , பிச்சையிட வருகின்ற மகளிரது வெள்ளிய வளைகளைக்கவர்வீராயின் , மலையரையன் மகளாகிய உம் தேவி மனம் பொறுப்பாளோ ? சொல்லீர் .



பாடல் எண் : 4

விட்டதுஓர் சடைதாழ, வீணைவிடங் காக,

வீதிவிடை ஏறுவீர், வீண்அடிமை உகந்தீர்,

துட்டர் ஆயினபேய்கள் சூழநட மாடிச்

சுந்தரராய்த் தூமதியம் சூடுவது சுவண்டே,

வட்டவார் குழல்மடவார் தம்மை மயல் செய்தல்

மாதவமோ, மாதிமையோ, வாட்டம் எலாம் தீரக்

கட்டிஎமக்கு ஈவதுதான் எப்போது சொல்லீர்,

கடல்நாகைக் காரோணம் மேவி இருந் தீரே.


         பொழிப்புரை : கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே . நீர் வீணாக அடிமைகளை வைத்துக் கொண்டீர் ; மற்றும் , அவிழ்த்துவிட்ட சடைகள் கீழே விழ , வீணை அழகுடையதாய் விளங்க , தெருவில் விடையை ஏறிச் செல்வீர் ; கொடியனவாகிய பேய்கள் சூழ நடன மாடுதலை மேற்கொண்டு . அழகுடையவராய் , மாசற்ற பிறையைச் சூடுவது அழகோ ? அன்றியும் வட்டமாக முடிக்கப்படுகின்ற நீண்ட கூந்தலையுடைய மகளிரை மயக்குவதுதான் உமக்குப் பெரிய தவமோ ? அல்லது பெருமையோ ? இவையெல்லாம் எவ்வாறாயினும் ஆக ; எங்கள் துன்பமெல்லாம் நீங்கும்படி எங்கட்குப் பொற்கட்டியைக் கொடுப்பது எப்போது ? சொல்லீர் .



பாடல் எண் : 5

மிண்டுஆடித் திரிதந்து, வெறுப்பனவே செய்து,

வினைக்கேடு பலபேசி, வேண்டியவா திரிவீர்,

தொண்டுஆடித் திரிவேனைத் தொழும்புதலைக்கு ஏற்றும்

சுந்தரனே, கந்தமுதல் ஆடைஆ பரணம்

பண்டாரத்தே எனக்குப் பணித்துஅருள வேண்டும்,

பண்டுதான் பிரமாணம் ஒன்று உண்டே, நும்மைக்

கண்டார்க்கும் காண்புஅரிதாய்க் கனல்ஆகி நிமிர்ந்தீர்,

கடல்நாகைக் காரோணம் மேவி இருந் தீரே.


         பொழிப்புரை : அழகரே , கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , நீர் , உமக்குத் தொண்டு செய்து திரிகின்ற என்னை அடிமையாக ஏற்றுக் கொண்டும் அருள் பண்ணாது, வன்கண்மை கொண்டு திரிந்தும் , வெறுக்கப்படும் செய்கைகளையே செய்தும் , காரியக்கேடு பலவற்றைச் சொல்லியும் , உம் மனம் வேண்டியவாறே திரிவீர் ; உம்மை நான் எவ்வாறு அகப்படக் காணுதல் கூடும் ! ஏனெனில் , முன்னே உம்மை அங்ஙனம் யாரேனும் கண்டார் என்பதற்கு யாதேனும் பிரமாணம் உண்டோ ! ` கண்டோம் ` என்பார்க்கும் , அடிமுடி காணுதல் அரிதாம்படி நெருப்பாகியே . நீண்டு நின்றீரல்லிரோ ? அதனால் , நும் இயல்பையெல்லாம் விடுத்து , உமது கருவூலத்திலிருந்து நறுமணம் , ஆடை , ஆபரணம் முதலியவற்றை எனக்கு அளித்தருளல் வேண்டும் .



பாடல் எண் : 6

இலவஇதழ் வாய் உமையோடு எருதுஏறிப் பூதம்

இசைபாட இடுபிச்சைக்கு எச்சு உச்சம் போது

பலஅகம்புக்கு உழிதர்வீர், பட்டோடு சாந்தம்

பணித்து அருளாது இருக்கின்ற பரிசு என்ன படிறோ,

உலவுதிரைக் கடல்நஞ்சை அன்றுஅமரர் வேண்ட

உண்டுஅருளிச் செய்தது உமக்கு இருக்க ஒண்ணாது, இடவே

கலவமயில் இயலவர்கள் நடமாடும் செல்வக்

கடல்நாகைக் காரோணம் மேவி இருந் தீரே.


         பொழிப்புரை : தோகையையுடைய மயில்போலுஞ் சாயலை யுடைய மகளிர் நடனம் புரிகின்ற , செல்வத்தையுடைய கடற்கரைக்கண் உள்ள திருநாகைக்காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , நீர் , இலவம்பூப்போலும் இதழ் பொருந்திய வாயை யுடைய உமையவளோடு எருதின்மேல் ஏறிக்கொண்டு , பூதங்கள் இசையைப் பாட , பலரும் இடுகின்ற பிச்சைக்கு , வேள்வியை உடைய உச்சிப் பொழுதில் பல இல்லங்களில் புகுந்து திரிவீர் ; ஆயினும் , நீர் அன்று தேவர்கள் வேண்ட அசைகின்ற அலைகளையுடைய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு அவர்களுக்கு அருள்செய்தது , அவர்தம் முறையீட்டைக் கேட்டு உமக்கு வாளா இருக்க வொண்ணாது கருணை மேலிட்டமையாலே ; அங்ஙனமாக , இப்பொழுது எனக்குப் பட்டும் , சாந்தும் பணித்தருளாதிருக்கின்ற தன்மை என்ன வஞ்சமோ !



பாடல் எண் : 7

தூசு உடைய அகல்அல்குல் தூமொழியாள் ஊடல்

தொலையாத காலத்துஓர் சொல்பாடாய் வந்து

தேசுஉடைய இலங்கையர்கோன் வரைஎடுக்க அடர்த்துத்

திப்பியகீ தம்பாடத் தேரொடுவாள் கொடுத்தீர்,

நேசம்உடை அடியவர்கள் வருந்தாமை அருந்த

நிறைமறையோர் உறைவீழி மிழலைதனில் நித்தல்

காசுஅருளிச் செய்தீர்,இன்று எனக்குஅருள வேண்டும்,

கடல்நாகைக் காரோணம் மேவி இருந் தீரே.


         பொழிப்புரை : கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , நல்லாடையை உடுத்த அகன்ற அல் குலையும் , தூய மொழியையும் உடைய உம் தேவி உம்பால் கொண்ட ஊடலை நீர் தொலைக்க முயன்றும் தொலையாதிருந்த காலத்தில் , நீர் சொல்ல வந்தவன் போல , ஒளியையுடைய இலங்கைக்கு அரசனாகிய இராவணன் வந்து உமது மலையைப் பெயர்க்க , அவனை முன்னர் ஒறுத்து , அவன் சிறந்த இசையைப் பாட , அவனுக்குத் தேரும் , வாளும் கொடுத்தீர் ; அதுவன்றி , வற்கடத்தில் அன்புடைய அடியார்கள் பசியால் வாடுதல் இன்றி நன்கு உணவருந்தி இருக்குமாறு , மறையவர் நிறைந்த திருவீழிமிழலையில் நாள்தோறும் அன்று படிக்காசு அருளினீர் ; அதுபோல , இன்று எனக்கு அருளல்வேண்டும் .



பாடல் எண் : 8

மாற்றமேல் ஒன்றுஉரையீர், வாளாநீர் இருந்தீர்,

வாழ்விப்பன் எனஆண்டீர், வழிஅடியேன் உமக்கு,

ஆற்றஏல் திருஉடையீர், நல்கூர்ந்தீர் அல்லீர்,

அணிஆரூர் புகப்பெய்த அருநிதியம் அதனில்

தோற்றமிகு முக்கூற்றில் ஒருகூறு வேண்டும்,

தாரீரேல் ஒருபொழுதும் அடியெடுக்கல் ஒட்டேன்,

காற்றுஅனைய கடும்பரிமா ஏறுவது வேண்டும்,

கடல்நாகைக் காரோணம் மேவி இருந் தீரே.


         பொழிப்புரை : கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , யான் உமக்கு வழிவழியாக அடியேன் ; அதுவன்றி , நீர் வலிந்து , என்னை , ` வாழ்விப்பேன் ` என்று சொல்லி அடிமை கொண்டீர் ; மிக்க செல்வம் உடையீர் ; வறுமை யுடையீரும் அல்லீர் ; ஆயினும் , மறுமொழி ஒன்றும் சொல்லாது வாய் வாளாதிருக்கின்றீர் ; அழகிய திருவாரூரிலே சேரும்படி நீர் சேர்த்து வைத்துள்ள மிக்க பொருட் குவியலில் , எனக்கு வேண்டுவதாய் என் உள்ளத்தில் மிக்குத் தோன்றுகின்ற முக்கூற்றில் ஒருகூறு எனக்கு அளித்தருளல் வேண்டும் ; அதனோடு ஏறிப் போவதற்கு , காற்றோடு ஒத்த விரைந்த நடையினையுடைய குதிரை வேண்டும் ; இவைகளை அளியாதொழியின் , உம்மை ஒருபொழுதும் அப்பால் அடியெடுத்து வைக்க ஒட்டாது , உம் திருவடிகளைப் பிடித்துக் கொள்வேன் .



பாடல் எண் : 9

மண்உலகும் விண்உலகும் உம்மதே ஆட்சி,

மலைஅரையன் பொற்பாவை சிறுவனையும் தேறேன்,

எண்ணிலிஉண் பெருவயிறன் கணபதிஒன்று அறியான்,

எம்பெருமான், இதுதகவோ, இயம்பிஅருள் செய்யீர்,

திண்எனஎன் உடல்விருத்தி தாரீரே ஆகில்,

திருமேனி வருந்தவே வளைக்கின்றேன், நாளைக்

கண்ணறையன் கொடும்பாடன் என்று உரைக்க வேண்டா,

கடல்நாகைக் காரோணம் மேவி இருந் தீரே.


         பொழிப்புரை : கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , எம்பெருமானே , மண்ணுலகிலும் , விண்ணுலகிலும் ஆட்சி உம்முடையதே நடைபெறுகின்றது . ஆதலின் , நான் உம்மையுந் தெளிய மாட்டேன் ; உம் தேவியாகிய மலையரையன் மகளையும் , சிறுவனாகிய முருகனையும் தெளியமாட்டேன் ; அளவின்றி உண்கின்ற பெருவயிற்றானாகிய கணபதி , தன் உணவையன்றி வேறொன்றையும் அறியானாகலின் , அவனிடம் நான் சென்று எதனை வேண்டுவேன் ? உம் குடிமுழுதும் இவ்வாறிருத்தல் தக்கதோ ? சொல்லியருளீர் ; இப்பொழுது உறுதியாக என் உடலிற்குப் பிழைப்பைத் தாரீரேயாகில், உம் திருமேனி வருந்தும்படி கட்டிப் பிடித்துக் கொள்வேன்; பின்பு, `இவன் கண்ணோட்டம் சிறிதும் இல்லாதவன்; கொடுமையுடையவன் ` என்று என்னை வெறுத்துரைக்க வேண்டா .



பாடல் எண் : 10

மறிஏறு கரதலத்தீர், மாதிமையேல் உடையீர்,

மாநிதியம் தருவன் என்று வல்லீராய் ஆண்டீர்,

கிறிபேசிக் கீழ்வேளூர் புக்கு இருந்தீர், அடிகேள்,

கிறி உம்மால் படுவேனோ, திருஆணை உண்டேல்,

பொறிவிரவு நற்புகர்கொள் பொற்சுரிகை மேல்ஓர்

பொன்பூவும் பட்டிகையும் புரிந்துஅருள வேண்டும்,

கறிவிரவு நெய்சோறு முப்போதும் வேண்டும்,

கடல்நாகைக் காரோணம் மேவி இருந் தீரே.


         பொழிப்புரை : மான் கன்று பொருந்திய கையை உடையவரே.  தலைவரே , கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , நீர் , பெருமையோ மிக உடையீர் ; ` மிக்க பொருட்குவையைத் தருவேன் ` என்று சொல்லி , வழக்கில் வல்லீராய் என்னை ஆட்கொண்டீர் ; ஆனால் , இப்பொழுது பொருள் இல்லீர் போல வஞ்சனைகள் பேசி , திருக்கீழ்வேளூரிற் போய்த் தங்கியிருக்கின்றீர் ; உமது உறுதிமொழி எனக்கு உள்ளது என்றால் , நான் உம்மால் வஞ்சிக்கப்படுவேனோ ! படேன் , இலச்சினை பொருந்திய, நல்ல அழகினைக் கொண்ட பொன்னாலாகிய உடைவாளும், தலையில் சூடிக்கொள்ளும் பொற்றாமரைப் பூவும், பட்டுக் கச்சும் எனக்கு அளித்தருளல் வேண்டும். அன்றியும், மூன்று பொழுதிலும் , கறியும் , சோறும் , அவை இரண்டோடும் கலக்கின்ற நெய்யும் ஆகிய இவைகளும் வேண்டும் .



பாடல் எண் : 11

பண்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும் எனக்கும்

பற்றுஆய பெருமானே, மற்றுஆரை உடையேன்,

உண்மயத்த உமக்குஅடியேன் குறைதீர்க்க வேண்டும்,

ஒளிமுத்தம் பூணாரம் ஒண்பட்டும் பூவும்

கண்மயத்த கத்தூரி கமழ்சாந்தும் வேண்டும்.

கடல்நாகைக் காரோணம் மேவி இருந்தீர், என்று

அண்மயத்தால் அணிநாவல் ஆரூரன் சொன்ன

அருந்தமிழ்கள் இவைவல்லார், அமர் உலகுஆள் பவரே.


         பொழிப்புரை : அழகிய திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் , திருநாகைக் காரோணத்துப் பெருமானாரை அடுத்துநின்ற தன்மை யால் , அவரை , ` கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , இசையின் வண்ணமேயாய் உள்ள சொற்களையுடைய ` பரவை சங்கிலி ` என்னும் இருவருக்கும் , எனக்கும் சார்பாய் உள்ள பெருமானே , யான் உம்மையன்றி வேறு யாரைச் சார்பாக உடையேன் ? உமக்கு நெஞ்சறிந்த வண்ணமே பூண்ட அடிமையையுடையேனாகிய என்குறையை நீக்கியருளல் வேண்டும் ; ஒளியையுடைய முத்துக்களால் ஆக்கி அணிகின்ற மாலையும் , ஒள்ளிய பட்டாடையும் , பூவும் , கண் நோக்கு நிறைந்த கத்தூரியின் மணம் கமழ்கின்ற , சந்தனமும் வேண்டும் ` என்று வேண்டிப் பாடிய , அரிய தமிழ்ப் பாடல்களாகிய இவைகளைப் பாட வல்லவர்கள் , அமரர் உலகத்தை ஆள்வார்கள்.


                                             திருச்சிற்றம்பலம்




No comments:

Post a Comment