7 Dec 2020

திருநாவுக்கரசர் பதிகம் 3 (பாணத் தால்மதின்)


ஓதுவார் ஹரிஹர தேசிகர்

ஓதுவார் மயிலை சற்குருநாத தேசிகர்

5. 083   திருநாகைக்காரோணம்

                            திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1

பாணத் தால்மதின் மூன்றும் எரித்தவன்

பூணத் தான் அரவு ஆமை பொறுத்தவன்

காணத் தான்இனி யான்கடல் நாகைக்கா

ரோணத் தான்என நம்வினை ஓயுமே.


         பொழிப்புரை : ஓர் அம்பினால் மூன்று மதில்களையும் எரித்தவனும் , தான் அணியாகப் பூணப் பாம்பையும் ஆமையையும் தாங்கியவனும் , காண இனியவனும் ஆகிய கடல் நாகைக் காரோணத்தான் என நம்வினை ஓயும் !



பாடல் எண் : 2

வண்டு அலம்பிய வார்சடை ஈசனை

விண்த லம்பணிந்து ஏத்தும் விகிர்தனைக்

கண்ட லங்கமழ் நாகைக்கா ரோணனைக்

கண்ட லும்வினை ஆன கழலுமே.


         பொழிப்புரை : வண்டுகள் ஒலிக்கும் நீண்ட சடையுடைய ஈசனும் , விண்ணுலகம் பணிந்தேத்தும் மேலானவனும் , தாழை கமழ்கின்ற நாகைக்காரோணனுமாகிய பெருமானைக் காணுதலும் வினைகள் நீங்கும் .



பாடல் எண் : 3

புனையும் மாமலர் கொண்டு புரிசடை

நனையும் மாமலர் சூடிய நம்பனைக்

கனையும் வார்கடல் நாகைக்கா ரோணனை

நினைய வே,வினை ஆயின நீங்குமே.


         பொழிப்புரை : மாமலர்களைக் கொண்டு புனையும் புரிசடை உடைய நம்பனும் . கள்ளால் நனையும் மாமலரைச் சூடிய நம்பனும் ஆகிய ஒலிக்கும் நீண்ட கடல் நாகைக்காரோணனை நினைய வினைகள் நீங்கும் .



பாடல் எண் : 4

கொல்லை மால்விடை ஏறிய கோவினை

எல்லி மாநடம் ஆடும் இறைவனைக்

கல்லி னார்மதில் நாகைக்கா ரோணனைச்

சொல்ல வே,வினை ஆனவை சோருமே.


         பொழிப்புரை : முல்லை நிலத்து விடையேறிய அரசனும் , இரவில் மகாதாண்டவம் புரியும் இறைவனும் ஆகிய , கற்களால் கட்டப்பட்ட மதில் சூழ்ந்த நாகைக்காரோணனைச் சொல்ல வினைகள் சோரும் .



பாடல் எண் : 5

மெய்ய னைவிடை யூர்தியை வெண்மழுக்

கைய னைக்கடல் நாகைக்கா ரோணனை

மைஅ னுக்கிய கண்டனை வானவர்

ஐய னைத்தொழு வார்க்குஅல்லல் இல்லையே.


         பொழிப்புரை : உண்மையே உருவானவனும் , விடையை ஊர்தியாகக்கொண்டவனும் , வெண்மழுவைக் கையிற்கொண்டவனும் , நாகைக்காரோணனும் , ஆலகால நஞ்சினை வருத்திய திருக்கழுத்தினனும் ஆகிய தேவர் தலைவனைத் தொழுவார்க்கு அல்லல் இல்லை .



பாடல் எண் : 6

அலங்கல் சேர்சடை ஆதிபு ராணனை

விலங்கல் மெல்லியல் பாகம் விருப்பனைக்

கலங்கள் சேர்கடல் நாகைக்கா ரோணனை

வலங்கொள் வார்,வினை ஆயின மாயுமே.


         பொழிப்புரை : மாலைகள் சேர்ந்த சடையையுடைய ஆதி புராணனை , மலைமங்கையை ஒருபாகம் விரும்பிக் கொண்டவனை , கப்பல்கள் சேரும் கடல்நாகைக்காரோணனை வலம் கொண்டு வணங்குவார் வினைகள் மாயும் .



பாடல் எண் : 7

சினங்கொள் மால்கரி சீறிய ஏறினை

இனங்கொள் வானவர் ஏத்திய ஈசனைக்

கனம்கொள் மாமதில் நாகைக்கா ரோணனை

மனம்கொள் வார்,வினை ஆயின மாயுமே.


         பொழிப்புரை : சினங்கொண்ட பெரிய வேழத்தைச் சினந்து பொறாத ஏறுபோல்வானும் , தொகுதி கொண்ட தேவர்கள் ஏத்திய ஈசனும் ஆகிய பெருமைகொண்ட மாமதில் சூழ்ந்த நாகைக் காரோணனை உள்ளத்துக்கொள்ளுவார் வினைகள் மாயும் .



பாடல் எண் : 8

அந்த மில்புகழ் ஆயிழை யார்பணிந்து

எந்தை ஈசன்என்று ஏத்தும் இறைவனைக்

கந்த வார்பொழில் நாகைக்கா ரோணனைச்

சிந்தை செய்யக் கெடும்துயர், திண்ணமே.


         பொழிப்புரை : ஆயிழையார்கள் பணிந்து முடிவற்ற புகழைப் பாடி எந்தையே ! ` ஈசனே ` என்று வாழ்த்தும் இறைவனாகிய மணம் வீசும் நெடிய பொழில் சூழ்ந்த நாகைக்காரோணனைச் சிந்தித்தால் திண்மையாகத் துயரங்கள் கெடும் .



பாடல் எண் : 9

கருவ னைக்கடல் நாகைக்கா ரோணனை

இருவ ருக்குஅறி ஒண்ணா இறைவனை

ஒருவ னைஉண ரார்புரம் மூன்றுஎய்த

செருவ னைத்தொழத் தீவினை தீருமே.


         பொழிப்புரை : உலகிற்கெல்லாம் கருவாகியவனும் . கடல்நாகைக் காரோணனும் , பிரமன் திருமால் ஆகிய இருவருக்கறியவியலாத இறைவனும் , ஒப்பற்றவனும் ஆகிய உணராத அசுரரது முப்புரங்களை எய்த போரை உடைய பெருமானைத் தொழத் தீவினைகள் தீரும் .



பாடல் எண் : 10

கடல்க ழிதழி நாகைக்கா ரோணன்தன்

வடவ ரைஎடுத்து ஆர்த்த அரக்கனை

அடர ஊன்றிய பாதம் அணைதரத்

தொடர அஞ்சும் துயக்குஅறும் காலனே.


         பொழிப்புரை : கடல் உப்பங்கழிகள் பொருந்திய நாகைக் காரோணன் தன் திருக்கயிலையை எடுத்து ஆர்த்த இராவணனை அடரத் திருவிரலால் ஊன்றிய பாதம் அணைந்தால் துயக்கற்ற காலன் தொடர அஞ்சுவான் .

                                             திருச்சிற்றம்பலம்



No comments:

Post a Comment