7 Dec 2020

திருநாவுக்கரசர் பதிகம் 4 (பாரார் பரவும்)


ஓதுவார் ஹரிஹர தேசிகர்


6. 022    திருநாகைக் காரோணம்

                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1

பாரார் பரவும் பழனத் தானை,

         பருப்பதத் தானை, பைஞ்ஞீலி யானை,

சீர்ஆர் செழும்பவளக் குன்றுஒப் பானை,

         திகழும் திருமுடிமேல் திங்கள் சூடிப்

பேர்ஆ யிரம்உடைய பெம்மான் தன்னை,

         பிறர்தன்னைக் காட்சிக்கு அரியான் தன்னை,

கார்ஆர் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்

         காரோணத்து எஞ்ஞான்றும் காண லாமே.


         பொழிப்புரை :உலகத்தார் போற்றும் திருப்பழனம் , சீசைலம் பைஞ்ஞீலி என்ற திருத்தலங்களை உடைய பெருமான் சிறப்புடைய செழிப்பான பவளக்குன்றம் போல்பவனாய்த் திருமுடிமேல் பிறையைச் சூடியவனாய் , எண்ணிறந்த பெயர்களை உடையவனாய்ப் பிறர் தம் முயற்சியால் தன்னைக் காண முடியாதவனாய்க் கரிய கடலால் ஒருபுறம் சூழப்பட்ட அழகிய குளிர்ந்த நாகைக் காரோணத்தில் என்றும் தரிசிக்கும் வகையில் உள்ளான் .



பாடல் எண் : 2

விண்ணோர் பெருமானை, வீரட் டனை,

         வெண்ணீறு மெய்க்குஅணிந்த மேனி யானை,

பெண்ணானை, ஆணானை, பேடி யானை,

         பெரும்பற்றத் தண்புலியூர் பேணி னானை,

அண்ணா மலையானை, ஆன்ஐந்து ஆடும்

         அணிஆரூர் வீற்றுஇருந்த அம்மான் தன்னை,

கண்ணார் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்

         காரோணத்து எஞ்ஞான்றும் காண லாமே.


         பொழிப்புரை :விண்ணோர் பெருமானாய் வீரட்டனாய் , வெண்ணீறு அணிந்த மேனியனாய்ப் பெண் ஆண் பேடிகளாய் உள்ளானாய்ப் பெரும்பற்றப் புலியூர் அண்ணாமலை அழகிய ஆரூர் என்ற திருத்தலங்களில் வீற்றிருக்கும் பெருமானாய்ப் பஞ்சகவ்விய அபிடேகத்தை விரும்பும் பெருமானை இடம் அகன்ற கடல் ஒரு பக்கம் சூழ்ந்த அந்தண் நாகைக் காரோணத்தில் என்றும் காணலாம் .



பாடல் எண் : 3

சிறையார் வரிவண்டு தேனே பாடும்

         திருமறைக் காட்டு எந்தை சிவலோகனை,

மறைஆன்ற வாய்மூரும் கீழ்வே ளூரும்

         வலிவலமும் தேவூரும் மன்னி அங்கே

உறைவானை, உத்தமனை, ஒற்றி யூரில்

         பற்றிஆள் கின்ற பரமன் தன்னை,

கறைஆர் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்

         காரோணத்து எஞ்ஞான்றும் காண லாமே.


         பொழிப்புரை :சிறகுகளையும் புள்ளிகளையும் உடைய வண்டுகள் இனிமையாகப்பாடும் திருமறைக்காடு , வேதம் முழங்கும் திருவாய்மூர் , கீழ்வேளூர் , வலிவலம் , தேவூர் இவற்றில் உகந்தருளி இருக்கும் உத்தமனாய் , எந்தையாகிய சிவலோகனாய் , ஒற்றியூரை உறைவிடமாகக் கொண்டு உலகை ஆள்கின்ற மேம்பட்ட பெருமானைக் கருமை நிறைந்த கடல்புடை சூழ் அந்தண் நாகைக் காரோணத்து என்றும் காணலாம் .


 

பாடல் எண் : 4

அன்னமாம் பொய்கைசூழ் அம்ப ரானை,

         ஆச்சிரா மந்நகரும் ஆனைக் காவும்

முன்னமே கோயிலாக் கொண்டான் தன்னை,

         மூவுலகும் தானாய மூர்த்தி தன்னை,

சின்னமாம் பன்மலர்கள் அன்றே சூடிச்

         செஞ்சடைமேல் வெண்மதியஞ் சேர்த்தி னானை,

கன்னியம் புன்னைசூழ் அந்தண் நாகைக்

         காரோணத்து எஞ்ஞான்றும் காண லாமே.


         பொழிப்புரை :அன்னங்கள் மிகுகின்ற பொய்கைகள் சூழ்ந்த அம்பர் , பாச்சிலாச்சிராமம் , ஆனைக்கா என்பனவற்றை முன்னரே கோயிலாகக் கொண்டவனாய் , மூவுலகும் தான் பரந்திருக்கும் வடிவினனாய்ச் செஞ்சடைமேல் தனக்குரிய அடையாளப் பூச்சுக்களையும் பிறையையும் சூடிய பெருமானை இளையனவாதலின் நெடுநாள் நிலைத்திருக்கக்கூடிய புன்னை மரங்கள் சூழ்ந்த அந்தண் நாகைக் காரோணத்து என்றும் காணலாம் .



பாடல் எண் : 5

நடைஉடைய நல்எருது ஒன்று ஊர்வான் தன்னை,

         ஞானப் பெருங்கடலை, நல்லூர் மேய

படையுடைய மழுவாள் ஒன்று ஏந்தி னானை,

         பன்மையே பேசும் படிறன் தன்னை,

மடையிடையே வாளை உகளும் பொய்கை

         மருகல்வாய்ச் சோதி மணிகண் டனை,

கடைஉடைய நெடுமாடம் ஓங்கு நாகைக்

         காரோணத்து எஞ்ஞான்றும் காண லாமே.


         பொழிப்புரை :நல்ல நடையினை உடைய காளையை இவர்ந்து செல்பவனாய் , ஞானப் பெருங்கடலாய் , நல்லூரை விரும்பியவனாய் , மழுப்படையை ஏந்தியவனாய்த் தன் நிலையைப் பலவாகப் பேசும் பொய்யனாய் , மடைகளிடையே வாளை மீன்கள் தாவும் பொய்கைகளை உடைய மருகலின் ஒளிவீசும் நீல கண்டனாய் உள்ள பெருமானை நல்ல முகப்புக்களை உடைய பெரிய மாடங்கள் ஓங்கும் நாகைக் காரோணத்து என்றும் காணலாம் .



பாடல் எண் : 6

புலங்கள்பூந் தேறல்வாய் புகலிக் கோனை,

         பூம்புகார்க் கற்பகத்தை, புன்கூர் மேய

அலங்கலங் கழனிசூழ் அணிநீர்க் கங்கை

         அவிர்சடைமேல் ஆதரித்த அம்மான் தன்னை,

இலங்கு தலைமாலை பாம்பு கொண்டே

         ஏகாசம் இட்டுஇயங்கும் ஈசன் தன்னை,

கலங்கல் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்

         காரோணத்து எஞ்ஞான்றும் காண லாமே.


         பொழிப்புரை :வயல்களிலே பூக்களில் தேன் பொருந்தியுள்ள புகலித் தலைவனாய் , பூம்புகாரில் உள்ள கற்பகமாய் , அசைகின்ற கதிர்களை உடைய வயல்கள் சூழ்ந்த புன்கூரில் அழகிய நீரை உடைய கங்கையைச் சடைமேல் கொண்ட தலைவனாய் , தலைமாலையைச் சூடிப்பாம்பினை மேலாடையாகத் தரித்து விளங்குகின்ற ஈசனைக் கடலிலே மரக்கலங்கள் சூழ்ந்து காணப்படும் அந்தண் நாகைக் காரோணத்து என்றும் காணலாம் .



பாடல் எண் : 7

பொன்மணிஅம் பூங்கொன்றை மாலை யானை,

         புண்ணியனை, வெண்ணீறு பூசி னானை,

சின்மணிய மூவிலைய சூலத் தானை,

         தென்சிராப் பள்ளிச் சிவலோகனை,

மன்மணியை, வான்சுடலை ஊராப் பேணி

         வல்எருதுஒன்று ஏறும் மறைவல் லானை,

கல்மணிகள் வெண்திரைசூழ் அந்தண் நாகைக்

         காரோணத்து எஞ்ஞான்றும் காண லாமே.


         பொழிப்புரை :பொன்போன்று அழகிய கொன்றை மாலை சூடும் புண்ணியனாய் , வெண்ணீறு பூசியவனாய்ச் சிலமணிகள் கட்டப்பட்ட முத்தலைச் சூலத்தை ஏந்தியவனாய் , அழகிய சிராப்பள்ளிமேய சிவலோகனாய்த் தலையாய மணிபோல்பவனாய்ப் பெரிய சுடுகாட்டைத் தங்கும் இடமாக விரும்பிக்கொண்டு வலிய காளையை இவரும் வேதங்களில் வல்ல பெருமானை இரத்தினக் கற்களைக் கரைசேர்க்கும் வெள்ளிய அலைகள் சூழ்ந்த அந்தண் நாகைக் காரோணத்து என்றும் காணலாம் .



பாடல் எண் : 8

வெண்தலையும் வெண்மழுவும் ஏந்தி னானை,

         விரிகோ வணம்அசைத்த வெண்ணீற் றானை,

புண்தலைய மால்யானை உரிபோர்த் தானை,

         புண்ணியனை, வெண்ணீறு அணிந்தான் தன்னை,

எண்திசையும் எரிஆட வல்லான் தன்னை,

         ஏகம்பம் மேயானை, எம்மான் தன்னை,

கண்டல்அம் கழனிசூழ் அந்தண் நாகைக்

         காரோணத்து எஞ்ஞான்றும் காண லாமே.


         பொழிப்புரை :கோவணம் உடுத்து வெண்ணீறு பூசிப் புண்ணைத் தலையிலுடைய பெரிய யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்து வெண்தலை ஓட்டையும் வெள்ளிய மழுவையும் ஏந்திய புண்ணியனாய் , வெண்ணீறணிந்து எட்டுத் திசைகளிலும் தீயில் கூத்தாடுபவனாய் , ஏகம்பத்தில் விரும்பித் தங்கும் எம்பெருமானைத் தாழைப்புதர்கள் சூழ்ந்த அந்தண் நாகைக் காரோணத்து என்றும் காணலாம் .



பாடல் எண் : 9

சொல்லார்ந்த சோற்றுத் துறையான் தன்னை,

         தொல்நரகம் நன்னெறியால் தூர்ப்பான் தன்னை,

வில்லானை, மீயச்சூர் மேவி னானை,

         வேதியர்கள் நால்வர்க்கும் வேதஞ் சொல்லிப்

பொல்லாதார் தம்அரணம் மூன்றும் பொன்றப்

         பொறியரவம் மார்புஆரப் பூண்டான் தன்னை,

கல்ஆலின் கீழானை, கழிசூழ் நாகைக்

         காரோணத்து எஞ்ஞான்றும் காண லாமே.


         பொழிப்புரை :வேதங்கள் முழங்கும் சோற்றுத்துறை , மீயச்சூர் என்ற இவற்றை மேவியவனாய்ப் பலரையும் நல்ல நெறியில் ஒழுகச் செய்து நரகலோகத்தைப் பாழ்படச் செய்பவனாய் , ஒளியுடையவனாய் , வேதியர் நால்வருக்கும் வேத நெறியை அறிவித்தவனாய்த் தீய அசுரரின் மும்மதில்களையும் அழித்தவனாய்ப் புள்ளியை உடைய பாம்பினை மார்பில் பொருந்த அணிந்த பெருமானாய்க் கல்லாலின் கீழ் அமர்ந்த பிரானை உப்பங்கழிகள் சூழ்ந்த நாகைக் காரோணத்து என்றும் காணலாம் .



பாடல் எண் : 10

மனைதுறந்த வல்அமணர் தங்கள் பொய்யும்

         மாண்புஉரைக்கும் மனக்குண்டர் தங்கள் பொய்யும்

சினைபொதிந்த சீவரத்தர் தங்கள் பொய்யும்

         மெய்என்று கருதாதே, போத நெஞ்சே,

பனைஉரியைத் தன்உடலிற் போர்த்த எந்தை

         அவன்பற்றே பற்றாகக் காணின் அல்லால்,

கனைகடலின் தெண்கழிசூழ் அந்தண் நாகைக்

         காரோணத்து எஞ்ஞான்றும் காண லாமே.


         பொழிப்புரை :நெஞ்சே ! துறவு நிலையில் உள்ள சமணர்களின் பொய்யுரைகளையும் தம் பெருமையை எடுத்துரைக்கும் சமண சமய இல்லறத்திலுள்ள அறிவிலிகள் பேசும் பொய்யுரைகளையும் உடம்பிலே துவராடையை அணிந்த புத்தர்களின் பொய்யுரைகளையும் மனத்துக் கொள்ளாமல் , யானைத்தோல் போர்த்த எம்பெருமானைப் பற்றும் பற்றினையே உண்மையான விருப்பச் செயலாகக் கொண்டு காண்பதனை விடுத்துக் கடலின் கழி சூழ் நாகைக் காரோணத்து எம் பெருமானைக் காண இயலுமா ? அப்பெருமான் தன்னையே பற்றும் பற்றினை அடியவர்களுக்கு அருள் செய்து அகக்கண்களுக்குக் காட்சி வழங்குவான் என்பது .



பாடல் எண் : 11

நெடியானும் மலரவனும் நேடி ஆங்கே

         நேர்உருவங் காணாமே சென்று நின்ற

படியானை, பாம்புரமே காத லானை,

         பாம்புஅரையோடு ஆர்த்த படிறன் தன்னை,

செடிநாறும் வெண்தலையிற் பிச்சைக்கு என்று

         சென்றானை, நின்றியூர் மேயான் தன்னை,

கடிநாறு பூஞ்சோலை அந்தண் நாகைக்

         காரோணத்து எஞ்ஞான்றும் காண லாமே.


         பொழிப்புரை :திருமாலும் பிரமனும் தேடியும் காணமுடியாதபடி நீண்டு வளர்ந்த உருவமுடையவனாய் , பாம்புரத்தை விரும்பியவனாய் , பாம்பினை இடையில் கட்டிய வஞ்சகனாய் , முடை நாற்றம் வீசிய தலையோட்டில் பிச்சைக்கு என்று திரிந்தவனாய் , நின்றியூரை விரும்பித் தங்கிய பெருமானை மணங்கமழும் பூக்களை உடைய சோலைகளால் அழகும் குளிர்ச்சியும் பொருந்திய நாகைக் காரோணத்து என்றும் காணலாம் .

                                             திருச்சிற்றம்பலம்



No comments:

Post a Comment